×

இன்றுடன் விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்..! ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..! 

 

மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் 'அக்னி நட்சத்திரம்' அல்லது 'கத்திரி வெயில்' காலம், தமிழக மக்களைப் பொறுத்தவரை சவாலான காலகட்டமாகும். இந்த ஆண்டு மே 4ம் தேதி தொடங்கிய இந்த வெப்பத்தின் தாக்கம் மே 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பொதுவாக இந்த காலகட்டத்தில் சூரியனின் கதிர்கள் நேரடியாகவும், மிகத் தீவிரமாகவும் பூமியில் விழுவதால் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாகவே பதிவாகும். கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது..வறண்ட காற்று வீசுவதாலும் பகல் நேரங்களில் வெளியே நடமாடுவது மிகவும் கடினமாக இருந்தது 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயிலின் உச்சக்கட்டமாகக் கருதப்படும் ‘கத்திரி வெயில்’ காலம், இன்று (மே 28) உடன் நிறைவடைய உள்ளது. இருப்பினும், இன்றும் மே 30-ம் தேதி வரை மாநிலத்தின் சில பகுதிகளில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக, சென்னை மீனம்பாக்கம், திருத்தணி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 41.5 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.