×

“நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு”- எஸ்.பி.வேலுமணி

 

நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் உரையாற்றிய திமுக எம்பி தயாநிதி மாறன், “கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பார்கள்” எனக் கூறினார்.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எஸ்பி வேலுமணி தனது எக்ஸ் தளத்தில், “நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு! "கோவை மக்கள் கெடுத்தார்கள்" என்று சொல்ல திரு. தயாநிதி மாறனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? உழைக்கும் மக்களான கோவை மக்களை, அதிகார மமதையில் இழிவாகப் பேசிய அவருக்கு எனது வன்மையானக் கண்டனம்! #கோவை மக்களை இழிவுபடுத்துவதை ரசித்துக்கொண்டு சிரிக்கிறார் திரு. செந்தில் பாலாஜி. கோவை மாவட்ட மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை இதுதான். தனது பேச்சுக்கு தயாநிதிமாறன், கோவை மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

திமுக-வின் கோவை வெறுப்பு என்பது புதிது அல்ல. கோவைக்கு திமுக எதையும் கொடுத்ததாக வரலாறு இல்லை. வருவதாக இருந்ததை எல்லாம் கெடுத்ததாக மட்டுமே வரலாறு உள்ளது! இந்த தீய எண்ணம் கொண்ட தீயசக்தி திமுக-விற்கு மீண்டும் ஒருமுறை தக்க தண்டனையைக் கொடுக்க கோவை மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.