"அதிமுகவுல இருந்து யாரு போனாலும் திமுகவுல அமைச்சர் பதவி தர்றாங்க! மொத்தம் 16 பேர்.." - ஆர்.பி உதயகுமார்
அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார், அதிமுக பிரிந்து கிடக்கிறது என புரளியை கிளப்புகிறார்கள். திமுகவில் உள்ள 16 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள் தானே! எவர் போனால் என்ன இரட்டை இலை இருக்கும் வரை அதிமுக சோர்ந்து போகாது, தோற்று போகாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “எஸ்.ஐ.ஆர் மூலம் நடைபெறும் வாக்காளர் திருத்த பணிகளில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு கலந்து கொண்டு மக்களுக்கு அரணாக இருக்க வேண்டும். உசிலம்பட்டி என்றால் அதிமுக வின் கோட்டை, திமுகவினர் வேட்பாளரை நிறுத்தி நிறுத்தி சோர்ந்து போய்விட்டனர். அப்படி நினைத்து அலச்சியமாக இருக்க கூடாது. திமுகவின் அஜந்தா என்னவென்றால், திமுக தோற்று போவது உறுதி என உளவுத்துறை தெரிவித்துள்ளது. தோற்றுவிட்டால் பதவியில் இருக்க முடியாது என ஸ்டாலின் கட்டளை விடுத்து வருகிறார். ஒரு பதற்றத்தில் இருக்கிறார். அதனால் நேரடியாக சந்திக்க முடியாது என்பதற்காக இப்போது எஸ்ஐஆர் - யை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார்.
வரும் 11 ஆம் தேதி போராட்டம் நடத்துகிறது. ஆனால் மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் வாக்குசாவடியில் நிற்கின்றனர். பொண்ணு பிடிக்கவில்லை என்கின்றனர், ஆனால் தாலியை கட்ட வேண்டும் என்கின்றார்கள், ஒன்றும் புரியவில்லை. வலிமையோடு, எளிமையோடு வெற்றிகரமாக இரட்டை இலையின் ஆட்சி மலர போகிறது. அதிமுக பிரிந்து கிடக்கிறது, அவர் போய்விட்டார் என புரளியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள். எவர் போனால் என்ன இரட்டை இலை இருக்கும் வரை, உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுக மலரும்.
1972 இல் இருந்து அதிமுகவில் சேர்ந்தவர்களா இந்த கட்சியில் இருக்கிறார்கள்? திமுகவில் இருக்கும் 16 அமைச்சர்களும் அதிமுகவிலிருந்து போனவர்கள் தானே, அதிமுக சோர்ந்து போனதா, திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். கே.கே.எஸ்.ஆர், ஏ.வ.வேலு, செந்தல்பாலாஜி வரை அதிமுகவிலிருந்து திமுகவிற்கு போகலாம். அதிமுகவில் இருந்து யாரு போனாலும் திமுகவில் அமைச்சர் பதவி தருகிறார்கள். ஆனால் அதிமுக தோற்றுவிடவில்லை. அதனால் தான் அதிமுக பிரிந்த கிடக்கிறது என்ற மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள். எதை திமுக பரப்பினாலும், என்ன புரளியை கிளப்பினாலும் ஒன்னும் கதைக்கு ஆகாது. இனிமேல் ஒரு புரளியை கிளப்புவார்கள், நாங்கள் 5 ஆயிரம் கொடுக்க போறோம் என... திமுக 5 ஆயிரம் அல்ல 50 ஆயிரம் கொடுத்தாலும் இரட்டை இலை மலரும். எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கணிப்பு எடுத்துள்ளார், அதில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, 2 தொகுதி தான் அதையும் வெல்ல எடப்பாடி பழனிச்சாமி வியூகம் வகுத்து கொடுப்பார் அதன் மூலம் வெற்றி பெறுவோம். நேற்று ஸ்டாலின் பேசும் போது பறிதாபமாக பேசுகிறார், திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என ஒப்பாரி வைக்கிறார், தேர்தல் அறிவிக்கவே இல்லை. அதற்குள் திமுகவின் நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது” என விமர்சித்தார்.