×

ரூ.80 கோடிக்கு எழுதும் பேனாவை வாங்கி கொடுங்கள்! திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி அட்வைஸ்

 

சிவகாசி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆணைகுட்டம் கிராமத்தில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த தின விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று, ஏழை- எளியவருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “விடியா திமுகஆட்சியில் இதுவரை விடியல் வந்ததாக வரலாறு இல்லை. எந்த ஒரு திட்டமும் தமிழக மக்களுக்கு செயல்படுத்தப்படவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியில் ஏழை- எளியோருக்கு செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது தான் விடியா ஆட்சியின் சாதனை. எண்ணற்ற அற்புதமான திட்டங்களை தமிழக மக்களுக்கு தீட்டி செயல்படுத்திய தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி.

எழுதாத பேனாவுக்கு 80 கோடியில் சிலை வைக்கும் திமுக அரசு, எழுதும் பேனாவை 80 கோடி ரூபாய்க்கு வாங்கி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்த வாக்குகள் எங்களுக்கு வெற்றி தான். அங்குள்ள வாக்காளர்கள் யோசித்து, சிந்தித்து அதிமுகவுக்கு வாக்களித்தனர். மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலர அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிக் கொண்டிருந்தபோது ஆண்களும்- பெண்களும் அவ்வப்போது கூட்டத்திலிருந்து எழுந்து சென்றதை பார்த்த அதிமுக நிர்வாகிகள் அவர்களை எல்லாம் நாற்காலியில் அமருமாறு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென அதிமுக தொண்டர் ஒருவர் மேடையில்  ஏறி அவருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி அமருமாறு வலியுறுத்திய நிர்வாகிகள் அவரிடம் இருந்த சால்வையை வாங்கிக் கொண்டனர்.