"உட்கட்சி விஷயத்தில் தலையிடமோட்டோம் என சொல்லிவிட்டு ஓபிஎஸ்ஸை கூப்பிட்டு ஏன் அமித்ஷா பேசுகிறார்" - புகழேந்தி
பிஜேபியுடனான கூட்டணியை அண்ணா திமுக தொண்டர்கள், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் கஜேந்திரன் சூரியமூர்த்தி பிரின்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் புரட்சித்தலைவி அம்மா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த வா புகழேந்தி, “அண்ணா திமுக தொண்டர்கள் எந்த காலத்திலும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம், எதிர்த்து நிற்போம். அண்ணார் ஓபிஎஸ் அவர்கள் புது கட்சி தொடங்க மாட்டேன், யார் சொன்னது? நான் சொல்லவில்லை... என்று உங்கள் முன்னால் கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது. இவரை அருகில் வைத்துக் கொண்டு சொன்னது திரு வைத்திலிங்கம். அவருடன் அடுத்த இடத்தில் இருப்பவர் வைத்திலிங்கம் சொன்னதை அப்படியே மறைக்கிறார் ஓபிஎஸ்.
அதேபோல மூத்த தலைவர் பண்ருட்டியார் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியோடு இனி கூட்டணி இல்லை என்று கூறினார். வைத்தியலிங்கம் மிகத் தெளிவாக ஒரு மாதம் பொறுமையாக இருப்போம், பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால் தனி கட்சி ஆரம்பிப்போம் என்று சொன்னாரா? இல்லையா? தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்பொழுது போய் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து வந்ததாக அண்ணன் ஓபிஎஸ் சொல்கிறார். எல்லாமே முன்னுக்கு பின் முரணாக நடக்கிறது. சொந்தக் கட்சி விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கே ஏ செங்கோட்டையனை அழைத்து பேசுகிறார். ஓபிஎஸ்சை அழைத்து பேசுகிறார். எப்படியும் பழனிசாமி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவிற்கு தெரியும். ஆகவே இப்பொழுது ஓபிஎஸ்-ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளத்தான் அழைத்து சந்தித்திருக்கிறார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிகிறது. மேலும் மதச்சார்பற்ற கட்சிகள் உதவியோடு மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா கொள்கைகளை நிலை நிறுத்தும் வகையில் ஆட்சி அமைக்க பாடுபடுவோம்” என்றார்.