×

அதிமுக தலைமையை ஏற்றால் தவெகவுடன் கூட்டணி வைக்க தயார் - ஜெயக்குமார்

 

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் சாலை பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழிலாளர்கள், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்  செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தேர்தல் காலத்தில் பொய்யையே மூலதனமாக கொண்டு பொய்யிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  எந்த வாக்குறுதியும் திமுக நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார். சசிகலா கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, ஜனநாயக அடிப்படையில் யாரும் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். அதில் குறுக்கிட முடியாது அவர்கள் உரிமை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,  திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என தெரிவித்தார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஜெயக்குமார், முதலமைச்சர் ஸ்டாலின் நிதானமாக, சுயநினைவோடு இருக்கிறாரா இல்லையா? நாட்டில் என்ன நடக்கிறது என எதுவும் தெரியாமல் உள்ளார். அண்ணா மறைவுக்கு பிறகு எம் ஜி ஆர் அவர்களால் தான் கலைஞர் முதலமைச்சரானார். திமுக ஆட்சியில் கோபாலபுரம் கருவூலம் மட்டும் தான் நிரம்பும். அந்த சொத்தை பறிமுதல் செய்தால் எல்லாம் தேவையும் தீர்ந்துவிடும். தனியார் பேருந்துகளை on contract என கூறி பேருந்தை இயக்குங்கள் ஆனால் MTC என பயன்படுத்தி ஏன் பேருந்துகளை இயக்க வேண்டும் என பேசினார். இறுதியாக "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை பாடி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.