Immature அமைச்சர்! கைவிட்டு போன ஹூண்டாய் நிறுவனம்?- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்! Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா? Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.