×

உதயநிதிக்கு முடி சூட்டியதே ஸ்டாலின் செய்த சாதனை- எடப்பாடி பழனிசாமி

 

எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க ஆளுங்கட்சிக்கு தில் வேண்டும். அது விடியா திமுக அரசுக்கு உள்ளதா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜனநாயக நாட்டில் பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் சென்று அனுமதி பெற வேண்டிய நிலை விடியா திமுக ஆட்சியில் உள்ளது. அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கால சக்கரம் சுழலும், காட்சி மாறும்போது ஆட்சி மாறும். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, ஸ்டாலின் மேனேஜர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி அதன் பங்குதாரர்கள். அதிமுகவை ஒடுக்கி அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்போம், வழக்குகளை பார்த்து அதிமுக ஒருபோதும் பயப்படாது. திமுகவின் பி டீமை வைத்துக் கொண்டு அதிமுகவை முடக்க நினைத்தால் எதிர்காலத்தில் திமுகவே இல்லாமல்போகும்.

ஆட்சிக்குவந்தபின் உதயநிதிக்கு முடி சூட்டியதே ஸ்டாலின் செய்த சாதனை. சினிமாவிலும், அரசியலிலும் ஸ்டாலின் குடும்பம் சம்பாதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சம்பாதிப்பதற்கு மட்டுமே உள்ள ஒரு குடும்பம் ஸ்டாலின் குடும்பம். ஒரு கட்சிக்கு தொண்டர்கள்தான் முக்கியம், தலைவர் முக்கியமல்ல.அதிமுகவில் மட்டுமே உழைப்பவர்கள் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். அதிமுகவின் திட்டங்களை முடக்கி ஏழைகளின் வயிற்றில் அடித்த கட்சி தான் திமுக. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியதுதான் விடியா திமுக அரசின் சாதனை. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து அனைத்து துறைகளிலும் ஊழல். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் திமுகவினர் கில்லாடிகள். திமுக அளித்த வாக்குறுதிகளில் இதுவரை ஒன்றை கூட நிறைவேற்றவில்லை” எனக் கூறினார்.