"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் தொடரும்"- ஈபிஎஸ்
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்! "மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்கிற எனது எழுச்சிப் பயணம் உங்களின் பேராதரவோடு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தை முன்னெடுக்கும் மிக முக்கிய பொறுப்பினையும், அதற்குண்டான நேர்மையுடனும் அவர்களை வழிநடத்தும் ஒரு முன்கள வீரனாக நான் இருப்பதில் மிக்க பெருமையடைகிறேன்.எனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ந்தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ந்தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்திருக்கிறேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில், 46 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன்.
நான் சென்ற இடங்களில் எல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பட்டு நெசவாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், இளைஞர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறுகுறு தொழில் முனைவோர், மருத்துவர்கள், பாட்டாளி வர்க்கத்தினர், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள், கலைக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே, மக்கள் விரோத ஆட்சியில், அவர்கள் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் தாம் பெற்ற நன்மைகளையும், பயன்களையும் கூறும் அவர்கள், கழக ஆட்சியின் சாதனைகளை நினைத்து பெருமையடைவதாகக் கூறினர். அதேவேளையில், பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஆட்சியாளர்களால், தாம் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் கூறினார்கள். டெண்டரே விடாமல் ரூ.22 கோடிக்கு 2 விளம்பர ஏஜென்சிகளிடம் அரசு விளம்பரம் செய்யக் கொடுத்திருக்கிறது ஸ்டாலின் அரசு. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் 45 நாட்களுக்குள் 525 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள் என பெண்கள் மனு அளித்து வருகின்றனர்.
பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. குற்றங்களை கட்டுப்படுத்தத் தெரியவில்லை. நிர்வாகத் திறமையில்லாத அரசாக உள்ளது. தி.மு.க. கூறிய 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சைப் பொய் சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது இந்த மக்கள் விரோத ஸ்டாலின் மாடல் அரசு.தி.மு.க. ஆட்சியில் சாமானியர்கள் வீடே கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல், ஜல்லி, கம்பி என எல்லாம் விலையேறிவிட்டது. கனவில்கூட ஏழைகள் இனி வீடு கட்ட முடியுமா என்கின்ற நிலைதான் இருக்கின்றது என்பது குறித்த கவலை அனைவரிடமும் உள்ளது. வீட்டு வரி, கடை வரி என எல்லாமே உயர்ந்துவிட்டது. மக்கள் மீது நிதிச்சுமை ஏறியுள்ளது. குடும்ப ஆட்சியே கொடுங்கோல் ஆட்சியாக மாறியுள்ளது. திமுக ஆட்சியில், புயல், மழை வெள்ளம் வந்தாலும் விவசாயிகள், பொதுமக்களைப் பார்ப்பதும் கிடையாது.
மக்களை நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வதும் கிடையாது. மக்கள் விரோத ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். தி.மு.க.வினர், மக்களிடையே வாக்கு கேட்டுச் சென்றால், மக்களே அவர்களை விரட்டி அடிப்பார்கள். அந்த அளவிற்கு தி.மு.க. ஆட்சியின்மீது வெறுப்பில் உள்ளனர். அ.இ.அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த மோசமான தீய ஆட்சிக்கு முடிவுகட்டி நல்லாட்சியைத் தர வேண்டும் என என்னைச் சந்தித்த அனைவரும், என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். தாலிக்குத் தங்கம் திட்டத்தை தாய்மார்களும், பெண்களும் மீண்டும் நினைவூட்டி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தக் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வீட்டில் ஒருவராக என்னை ஏற்று கோரிக்கை வைத்த தாய்மார்கள் மகிழத்தக்க வகையில் பட்டுச் சேலை வழங்கப்படும் என்ற மங்களகரமான அறிவிப்பையும் வெளியிட்டேன்.மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாகச் சொல்லி பல மாதங்கள் தாய்மார்களை ஏமாற்றிய ஸ்டாலின் மாடல் அரசு, நாம் வலியுறுத்திய பிறகே திட்டத்தை அறிவித்தது. இதுவரை மாதந்தோறும் கொடுத்திருந்தால் ரூ.50 ஆயிரத்தை தாண்டி இருக்கும். ஆனால், ஆட்சியின் பாதிக் காலத்தை தாண்டிய பிறகு அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியதால் 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது.
இதுவரை 23 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். இதனையும் தாய்மார்கள் கோபத்துடன் கூறுவதை எனது பயணத்தில் கண்டேன். திறன் இல்லாத ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அவர்களுக்கு ஆறுதல் கூறி, கழக ஆட்சி அமைந்தவுடன் தொகை அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பால் தாய்மார்கள் அகம் மகிழ்ந்தனர். மீண்டும் ஏழைகளின் அரசாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் நிச்சயமாக பலதரப்பட்ட மக்களும் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என அவர்களுக்கு நான் உறுதியளித்திருக்கிறேன். அதை நிச்சயமாக கழக ஆட்சியில் செய்துகாட்டுவோம். ஆட்சி அதிகாரம் பெரிதல்ல. மக்களுக்காக பணி செய்யும் மக்களாட்சி வழங்குவதுதான்..." கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலின் அரசுக்கு மரண அடி கொடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.