சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் எனக் கூறும் மு.க.ஸ்டாலின்... புதுச்சேரியிலுள்ள சொகுசு விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை என தமிழக அரசியல் களம் நிமிடத்துக்கு நிமிடம் பெரும் எதிர்பார்ப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திவருகிறது.
அதிமுக- திமுக கூட்டணி அமையப்போவதாக பேச்சுவார்த்தை அடிபட்டவுடன் திமுக தலைவர் ஸ்டாலின், தனது எம்.எல்.ஏக்களை கூட்டி அவசர அவசரமாக கூட்டத்தை கூட்டுகிறார். கூட்டத்தில், “சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், ஆனால் கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. மூத்த நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம். என்ன முடிவுகள் எடுத்தாலும் அதற்கு எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் 10ஆம் தேதி வரை சென்னையில் இருக்க வேண்டும்” எனக் கூறுகிறார்
மறுபும் அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரியில் தங்கவைத்ததுடன் அவர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.புதுச்சேரியில் நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் 'நல்லதே நடக்கும், நான் கூறும் வரை யாரும் புதுச்சேரியை விட்டு புறப்பட வேண்டாம்' என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்எல்ஏ-க்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல்.. கட்சியின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.அதற்கு உங்களுடைய தேவை..தவெகவில் இருந்து யாரும் அழைத்தால் செல்ல வேண்டாம். நமக்கான வாய்ப்பு காத்திருக்கிறது எனக் கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனம் வருந்தியதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டியளிக்கிறார். அதுமட்டுமின்றி,எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கடலில் குதிக்க சொன்னாலும் அவர்கள் குதிப்பார்கள் என்றும், அதிசயம் நடக்கும், ஈபிஎஸ் முதலமைச்சராவார் எனக் கூறுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது அதிமுக- திமுக கூட்டணி ஏற்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.