×

“ஈபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும்; அதிசயம் நடக்கலாம்”-  புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேட்டி 

 

புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்னை புறப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைப்பார்கள் என குழப்பம் நீடித்து வரும் நிலையில் எம்எல்ஏக்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.


ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், “தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும். பதவி வெறியில் தமிழக அரசியலை புரட்டிப்போட முயலும் காங்கிரஸ் முயற்சியை ஈபிஎஸ் முறியடிப்பார். விஜய்க்கு ஆதரவு தர நாங்கள் ஏன் இங்கே கூட வேண்டும்? விஜய்யை போன்றவர்கள் ஆட்சி அமைக்க கூடாது. ஒரு அரசை அமைக்க சில தகுதிகள் உள்ளது. அவருக்கு அடிப்படைத் தகுதிகள் கூட இல்லை. விஜய் வெறும் சினிமா நடிகர் மட்டுமே. விஜய்க்கு அதிமுகவால் ஆதரவு அளிக்க இயலாது. சென்னையில் நிலவும் கடும் வெப்பம் காரணமாகவே அதிமுக MLAக்கள் புதுச்சேரியில் தங்கியுள்ளார்கள். 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க செல்ல மாட்டார். ஆளுநர் செய்வது சரிதான். விஜய்க்கு பெரும்பான்மை இல்லையே. பிள்ளைகளை தாய் பார்க்க வருவது போல எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி வருகிறார். அதிசயம் நடக்கலாம்” என்றார்.