ஓடும் ரயிலில் ஆடைகளை கழற்றி எறிந்து, RPF வீரரை பிளேடால் தாக்கிய நடிகை..!
நடிகை அந்தரா பானர்ஜிபிரபல மாடலும் நடிகையுமாக வலம் வருபவர் அந்தரா பானர்ஜி (வயது 31). மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவரான அந்தரா, தனது திரையுலக வாழ்க்கைக்காக மும்பைக்குக் குடிபெயர்ந்து சீரியல்களிலும், திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 2014-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நடிகை அந்தரா பானர்ஜி, பிரபலமான 'சாவ்தான் இந்தியா' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். கும்ரா, எண்ட் ஆஃப் இன்னசென்ஸ், சாவ்தான் இந்தியா உள்ளிட்ட டிவி சீரியல்கள் அவரைப் பிரபலப்படுத்தின.
'தி ஷாவுக்கீன்ஸ்' (The Shaukeens), 'யே ஹை இந்தியா' (Yeh Hai India) ஆகிய திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன. தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடிகை அந்தரா பானர்ஜி படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கிச் சென்ற ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அவரிடம் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் அவர் ஏசி பெட்டியில் ஏறி அங்குள்ள ஒரு இருக்கையில் சொகுசாக அமர்ந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. அப்போது அந்த ஏசி இருக்கைக்குரிய பயணி கேட்டதற்கு, நடிகை அந்தரா பானர்ஜி அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அவருடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அந்தப் பயணி, பயணச் சீட்டுப் பரிசோதகரான (TTE) ஹரிகேஷ் திரிபாதி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தார். அதன்படி அங்கு வந்த யாமினி காந்த் மிஸ்ரா என்ற உதவி ஆய்வாளர் (ASI) மற்றும் ராஜேஷ்குமார் என்ற காவலர் (Constable) ஆகிய இருவர் நடிகையிடம் பேசி, அவரை அவருடைய பெட்டிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த நடிகை அந்தரா, ரயில்வே பாதுகாப்புப் படையினரைத் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார். திடீரெனத் தனது ஆடைகளைக் கழற்றி எறிந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த ரேசர் பிளேடை எடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி வீசினார். இதில் உதவி ஆய்வாளரான யாமினிகாந்த் மிஸ்ராவின் கையில் காயம் ஏற்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினரின் சீருடை மற்றும் செல்போன்களையும் அவர் சேதப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாகவும் மிரட்டல் விடுத்தார்.
நள்ளிரவில் நடிகையின் இந்த திடீர் ரகளையால் அந்த ஏசி பெட்டியில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், ஏசி பெட்டியின் கதவுகளைப் பூட்டினர். அப்போது நடிகை அந்தரா பானர்ஜி, ரயிலின் கண்ணாடி கதவு வழியாக தப்பியோட முயன்றார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் பரபரப்பு நீடித்த நிலையில், அடுத்ததாக வந்த 'தஹானு' (Dahanu) ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பெண் போலீசார் ரயிலுக்குள் அதிரடியாகப் புகுந்து நடிகையைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.
இச்சம்பவம் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது