×

பார்வதி அம்மாளை சந்தித்து ரூ.15 லட்சம் வழங்கிய நடிகர் சூர்யா 

 

நடிகர் சூர்யா சார்பில் 15  லட்சம் ரூபாய் ராஜகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு வழங்கப்பட்டது.

நடிகர் சூர்யாவின்  2D Entertainment நிறுவனம் தயாரிப்பில், உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு, வெளியான “ ஜெய்பீம்” திரைப்படம்  உலகம் முழுக்க பாரட்டுக்களை குவித்து வருகிறது. படம் வெளியாகி  தமிழகத்தில் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. அரசியல் களத்திலும், பொது வெளியிலும் பெரும் விவாதத்தை இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. 

படத்தின் தாக்கத்தை அடுத்து, பழங்குடி இனத்தவருக்கு பெரும் நன்மைகளும் நடக்க துவங்கியுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்தி இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. காரணம் ஜெய் பீம் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு,  திரைப்பட மொழியில் உருவாக்கப்பட்ட தழுவல் என்பதால் படக்குழு நீதிபதி சந்துரு அவர்களின் பார்வையில் கிடைத்த தகவல்களுடன்,  அப்பகுதியில் நேரடி ஆய்வுகள் நடத்தி,  இப்படத்தை எடுத்தது. மறைந்த ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு படக்குழு சந்திக்காத நிலையில்,  சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவிடம் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாவுக்கு உதவும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற சூர்யா அவருக்கு ரூபாய் 10 லட்சம் வங்கி வைப்புநிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். 

இந்நிலையில் படத்தில் வந்த பாத்திரமான  ராஜாக்கண்ணு பாத்திரத்தின்  உண்மையான மனைவியான பார்வதியை, தனது வீட்டுக்கு வரவழைத்த நடிகர் சூர்யா இரவு விருந்து உபசரித்து,  நல உதவிகளை வழங்கவுள்ளார். சூர்யா தரப்பில் 10 லட்சமும் தயாரிப்பு நிறுவனம் என்ற முறையில் ஐந்து லட்சமும் மொத்தம் 15 லட்சம் பார்வதி பெயரில் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் வட்டி பணத்தை பார்வதி பயன்படுத்தும் வகையிலும் பார்வதிக்கு பிறகு அவரின் வாரிசுகள் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் தற்போது இந்த நிதியானது வழங்கப்பட்டுள்ளது