வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு ’பொங்கல் வாழ்த்து’ சொன்ன நடிகர் ரஜினிகாந்த்
பொங்கல் பண்டிகையை ஒட்டி தனது இல்லத்திற்கு முன்பாக குவிந்த ரசிகர்களுக்கு கை அசைத்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவரிடம் வாழ்த்துக்களை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் காலை முதலே அவரது இல்லத்திற்கு முன்பாக குவிந்தனர். பின்னர் தனது இல்லத்தின் முன்பு வெளியே நின்ற ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அவரது வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்கு கை அசைத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த்தை கண்டத்தும் ரசிகர்கள் “தலைவா தலைவா” என ஆரவாரம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, தீபாவளி, பிறந்தநாள் உள்ளிட்ட நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு முன்பாக ரசிகர்கள் கூடுவார்கள் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில் இன்றயை தினம் பொங்கல் தினத்தன்று தனது இல்லத்திற்கு முன்பு கூடி இருந்த ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்தார். ரசிகர்கள் வருகை அதிகமாக இருந்ததால் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு காவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். முதல் முறை வந்த போது ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த்தை சரியாக பார்கக முடியவில்லை என ரசிகர்கள் கூறினர். அதனை ஏற்று இரண்டாம் முறையாக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். மீண்டும் ரசிகர்கள் உங்களை பார்க்க வேண்டும் தலைவா என தொடர்ந்து கூச்சல் இட்டனர். அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், குறிப்பாக இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். இயக்குனர் சிபி சக்கரவர்த்தியோடு நடிக்கும் திரைப்படம் ஏப்ரலில் தொடங்கும். அந்த திரைப்படம் அனைவருக்கும் Entertainment Commercial படமாக இருக்கும்” என தெரிவித்தார்.