×

"மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை" - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!!

 

பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.  

இதுகுறித்து  போக்குவரத்துக்கழக நிர்வாக மேலாண் இயக்குநர் அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "2022-23 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் சேகரித்து அச்சடித்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமின்றி பயணிக்கலாம்.

அதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிட கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி (மாமல்லபுரம்), அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் ஆகியோர் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை  நடத்துநர்களிடம் காண்பித்து இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும்படி மீண்டும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை பேருந்துகளில் இருந்து இறக்கி விடும் நடத்துநர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.