×

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மீது ஆசிட் வீச்சு!

 

கோவையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து தனது கணவரை பிரிந்த ராதா 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது வீட்டின் அருகே இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். 

இதில் ராதாவின் வலது பக்க முகம், தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து இளம்பெண் மீது ஆசிட்டை வீசி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். ராதாவின் கணவர், ஆள் வைத்து இதைச் செய்தாரா அல்லது ராதாவிற்கு பழக்கமானவர்கள் யாரேனும் இதைச் செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.