1,000 கிலோ சாதத்தால் அபிஷேகம்... தஞ்சை பெரியகோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்..!
தஞ்சை உலகபுகழ் பெற்ற பெரியகோவிலில், பெருவுடையார் (சிவலிங்கம்) சன்னதியில் ஐப்பசி பௌர்ணமி (நவம்பர் 5, 2025) தினத்தில் 1,000 கிலோ சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம் நடைபெற்றது.இந்த விசேஷ அபிஷேகம் ஆண்டுதோறும் பவுர்ணமியையொட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பக்தர்கள் வழங்கிய 1,000 கிலோ பச்சரிசி சாதம், 500 கிலோ காய்கறிகள், பல இனிப்புகள், மலர்களால் பெருவுடையார் எழில் பொலிவாக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்டைக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், முள்ளங்கி, சவ்சவ், கேரட், வெண்டைக்காய், சோளக்கதிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வாழைப்பூ உள்ளிட்ட காய்களாலும், தர்பூசணி, அன்னாசிபழம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பழங்களாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மீதமுள்ள அன்னம் அருகில் உள்ள கல்லணைக்கால்வாயில் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.