×

ஆடித்திருவாதிரை - அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

 

ஆடித்திருவாதிரையை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும்.முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.இந்த ஆலயத்தின் சிறப்பினை கண்டு களித்திட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதி வாழ் மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கொண்டாடப்படுகின்ற இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என திமுக அரசு அறிவித்தது.

இந்நிலையில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடித்திருவாதிரையாக கொண்டாடப்படவுள்ளதால் அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்