×

கள்ளக்காதலன் கைவிட்டதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்!

 

பல்லடம் அருகே கள்ளக்காதலன் கைவிட்டதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பெரும்பாளி அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த குட்டை பகுதியில் தீக்காயங்களுடன் ஒரு பெண் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண் அம்மாபாளையத்தை சேர்ந்த கலா என்பதும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த 4 வருடங்களாக வேறொருவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்நபர் கலாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். பல முறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியாததாகவும், இன்று அவரை தொடர்பு கொண்ட கலா, தன்னை பார்க்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதற்கு அவர் சரிவர பதில் சொல்லவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அடுத்த பெரும்பாளிக்கு சென்ற கலா,  ஓரமாக இருந்த குட்டைக்கு சென்று தன் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.