×

விளையாட்டு போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வந்த மாணவி கடலில் மூழ்கி பலி

 

விளையாட்டு போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி வந்த கோவை கல்லூரி மாணவி கடலில் மூழ்கி பரிதாபமாக  உயிரிழந்தார். மீட்கபட்ட பயிற்சியாளர் உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் பூமதி(18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். புதுச்சேரியில் கல்லூரிகளுக்கிடையேயான குத்து சண்டை மற்றும் துரோ பால் விளையாட்டு போட்டியில் பங்கேற்க, பயிற்சியாளர் சர்வேஸ்வரன் தலைமையில் மாணவிகள் பூமதி, அமிர்தா உள்பட 18  மாணவர்கள் வேனில் புதுச்சேரி வந்தனர். புதுச்சேரி கடற்கரை சாலைக்கு வந்த இவர்கள், கடற்கரையில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது சர்வேஸ்வரன், பூமதி, அமிர்தா ஆகியோரை ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்து சென்றது.

இதை பார்த்து மற்ற மாணவர்கள் அலறினர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடலில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பூமதி இறந்து விட்டார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.