×

கல்லூரி வளாகத்தில் புகுந்து மாணவியை கடித்த கட்டுவிரியன் பாம்பு!

 

திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியை பாம்பு கொத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள அய்யதாம்பட்டியை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மீனா திண்டுக்கல் MVM அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். 

இந்நிலையில் இன்று 13.03.23 திங்கள்கிழமை என்பதால் கல்லூரி பேரவை கூட்டம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பேரவை கூட்டத்தில் மாணவி நின்று கொண்டிருந்த பொழுது கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு மாணவி மீனாவின் காலில் கொத்தியது. இதனால் சக மாணவிகள் அலறி அடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.  பின்னர் மயக்கம் அடைந்த மாணவி மீனாவை பேராசிரியர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்பொழுது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.