ரஜினி குடும்பத்துக்கு ஒரு நியாயம்; நரிக்குறவர் குடும்பத்துக்கு ஒரு நியாயமா?
ரஜினி குடும்பத்துக்கு ஒரு நியாயம்; நரிக்குறவர்களுக்கு ஒரு நியாயமா? என்று சினிமா ரசிகர்கள் கொதித்தெழுந்து வருகின்றனர்.
சிம்பு நடித்த பத்துதல திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கத்திற்கு நரிக்குறவர்கள் சினிமா பார்க்க சென்றுள்ளனர். அந்த நரிக்குற குடும்பத்தினரை தியேட்டர் நிர்வாகம் உடனடியாக தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து அங்கிருந்தவர்கள் தியேட்டர் நிர்வாகத்தினரை எதிர்த்து கேள்வி கேட்டதால் அதன் பின்னர் டிக்கெட் எடுத்தால் எல்லாரையும் உள்ளே அனுப்ப வேண்டியது தானே என்று பலரும் ஆத்திரப்பட, வேறு வழியின்றி தியேட்டர் நிர்வாகம் அவர்களை படம் பார்க்க உள்ளே அனுமதித்திருக்கிறது.
இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரோகிணி திரையரங்க நிர்வாகத்திற்கு சினிமா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனே இதற்கு ரோகிணி திரையரங்கம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
நரிக்குறவர் குடும்பத்தினருடன் குழந்தைகளும் வந்திருந்தார்கள் . பத்து தல படமோ யுஏ சான்றிதழ் பெற்ற படம் . 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்க முடியாது. அதனால்தான் முதலில் மறுப்பு தெரிவித்தோம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விளக்கத்தை பார்த்து சினிமா ரசிகர்கள் இது வெறும் சமாளிப்பு இதே ரஜினி நடித்த தர்பார் படத்துக்கும் யுஏ சான்றிதழ் தான்.
ரஜினியின் பேரனுக்கு லிங்காவுக்கு 10 வயது தான் இருக்கும் . அவரை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்? ரஜினி குடும்பத்திற்கு ஒரு நியாயம் நரிக்குறவர் குடும்பத்திற்கு ஒரு நியாயமா என்று ரோகினி திரையரங்கம் விளக்கம் அளித்த பின்னரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.