×

அடையாறு ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

 

சென்னையில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தைவெளி பகுதியை  சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் 36 வயதான ராமச்சந்திரன் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பணிக்கு சென்ற ராமச்சந்திரன் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சூழலில் மாயமான ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் திருவிக பாலம் அருகே நிற்பதாக அவரது குடும்பத்திற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து  தீயணைப்பு படையினர் அடையாறு ஆற்றில் ரப்பர் படகுமூலம் தேடுதல் பணியை தொடங்கினர். இதன் பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு  அடையாறு பாலத்தின் கீழ் ராமச்சந்திரன் சடலம் மிதந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமச்சந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.