×

காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

 

காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மந்தவெளி விசி தோட்டம் சேர்ந்த நபருக்கு 30 வயதில் வாய்பேச முடியாத காது கேளாத  மகள் உள்ளார். காது கேளாத, வாய்பேச முடியாத இந்த பெண் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இளம் பெண்ணுக்கு தன்னுடன் பயின்ற தோழி மூலமாக கடந்த 2019 ஆண்டு அடையாறு காந்தி நகரை சேர்ந்த வாய்பேச முடியாத ,காதுகேளாத அருண்கிஷோர்(32) என்பவர் அறிமுகமானார். 

இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து அருண்கிஷோர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து சிறுக சிறுக 3 லட்ச ரூபாய் பணத்தை பெற்று கொண்டார். இதனை தொடர்ந்து 2019 நவம்பர் மாதம் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த அருண் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த பெண்ணை அருண் மிரட்டியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருணகிஷோருடனான காதலை முறித்து கொண்டதுடன் அவருடன் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அருண், காதலி வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்து அவருக்கு தொல்லை கொடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன பெண் மைலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருண்கிஷோர் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.