முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு..!
முன்னாள் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன். இவர்களது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில், 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024 - -25ம் நிதியாண்டில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில், 150க்கும் மேற்பட்டோர், தலா, 25 லட்சம் முதல், 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, பணி பெற்றதற்கான விபரங்கள், சோத னையின் போது அமலாக்கத் துறைக்கு கிடைத்தன.
இதையடுத்து, பணி நியமனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுங்கள் என, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறையிடம், 232 பக்க ஆவணங் களுடன் கூடிய தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இருப்பினும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதனையடுத்து அதிமுக எம்பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளார்.சென்னை ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி, நேரு, முந்தைய திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, நேரு தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், அமலாக்கத்துறையினர் அளித்த கடிதங்கள் அடிப்படையில், நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தகவல் தெரிவித்தார்.இதனையடுத்து தலைமை நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என முந்தைய அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்து இருந்தார்.
அப்படி இருக்கையில் எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் எனக்கூறி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறினார்.