×

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..

 

இலங்கை கடற்படையால் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி  உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 68 பேரை, எல்லை தாண்டி  பீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து சிறைபிடித்தனர். ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் 18 மற்றும் 19 ஆம் தேதியும்,  புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 20 ஆம் தேதியும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.  மொத்தமாக 10 விசைப்படகுகளையும் கைப்பற்றிச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், மீதமுள்ள மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களில் 12 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர்.  மீதமுள்ள 56 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல்  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் படகு உள்ளிட்ட உடமைகளுக்கு  உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுக்கு  உத்தரவிட வேண்டும் என்றும், வரும்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு  உத்தரவிடக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.  விரைவில் இந்த மனு மீதான விசாரணை   நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.