CSK ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸ்..! சேப்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரிக்கு ரெடியா..?
19வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது.மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதிவரையிலான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அதன் முதல் போட்டியில் வரும் மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஏப். 3இல் சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியையும், ஏப். 5இல் பெங்களூரு சின்னசாமியில் ஆர்சிபி அணியையும், ஏப். 11இல் சென்னை சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும் சிஎஸ்கே எதிர்கொள்ள இருக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியில் தற்போது உள்நாட்டு வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு வீரர்கள் விரைவாக பயிற்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அதன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வரும் மார்ச் 22ஆம் தேதி அன்று (ஞாயிறு) முதற்முறையாக 'ROAR - 2026' என்ற நிகழ்ச்சியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், முரளி விஜய் மற்றும் சுப்ரமணிய பத்ரிநாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு நேரலை இசை நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார். சென்னை சேப்பாக்கமே இந்த நிகழ்ச்சியால் அதிரப்போகுது. 5 முறை கோப்பையை சிஎஸ்கே அணிக்கு வென்று கொடுத்த தோனியின் கடைசி சீசன் இது என்பதாலும், இந்த நிகழ்ச்சி சிஎஸ்கே ரசிகர்களுக்கு சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
சிஎஸ்கே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டிக்கெட்டை பெற வேண்டியது அவசியம். CSK அணியின் அதிகாரப்பூர்வ செயலி, இணையதளம் (https://www.chennaisuperkings.com/); District செயலி மற்றும் இணையதளம் (https://www.district.in/) ஆகியவற்றில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.