×

ஜூலை 11 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது என்ன?? - அறிக்கை கேட்கும்  ஹைகோர்ட்..

 


அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.  சட்ட முழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்திற்கு வருவாய் துறை சீல் வைத்தது . அத்துடன் இது தொடர்பாக வருகிற 27ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரியும் உத்தரவை  ரத்து செய்து அலுவலகத்தை ஒப்படைக்க கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும்., ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியே மனுதாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது வாதாடிய இபிஎஸ் தடப்பு வழக்கறிஞர்,  பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று  தெரிவித்தார்..

மேலும்,  "கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளரே தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் ஆவார். ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோப்புகளை எடுத்து சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தோம். உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை" என்றும் குறிப்பிட்டார்.  

இதனையடுத்து அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதலின்போது,   காவல்துறை  தலையிட்டதால்தான் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில்  கூறப்பட்டது.  இதனையடுத்து அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவம்  தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு  உத்தரவு பிறப்பித்த  சென்னை உயர்நீதிமன்றம் ,  விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.