செண்டை மேளம் வாசித்த மம்தா பானர்ஜி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
சென்னையில் நடைபெற்று வரும் மேற்குவங்க ஆளுநர் இல. கணேசன் இல்ல விழாவில் பங்கேற்று, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, செண்டை மேளம் வாசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்குவங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், நேற்று மாலை 5.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று காலை இல. கணேசன் இல்ல விழாவிற்கு சென்ற மம்தா பானர்ஜிக்கு, கேரள செண்டை மேளம் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் செண்டை மேளத்தை வாங்கிய மம்தா பானர்ஜி, கலைஞர்களுடன் இணைந்து தானும் செண்டை மேளம் வாசித்தது அசத்தினார். இது அங்குள்ளவர்களிடயே மகிழ்ச்சியையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசிக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.