×

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 806 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்..

 

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்  806 பக்க குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் காதலர் ஹரிஹரன் ,ஜூனைத்  அகமது, மாடசாமி, பிரவீன்  மற்றும்  பள்ளி மாணவர்கள்  நான்கு பேர் என மொத்தம்   எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.  கூர்நோக்கு சிறையில்  இருந்த 4 சிறார்களையும்  விருதுநகர் இளையோர் நீதிக்குழுமம் ஜாமீனில் விடுதலை செய்தது.   இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்,  இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு  தொடர்பாக பெற்றோர், உறவினர், நண்பன் உள்பட மொத்தம் 120 பேரிடம்  சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.   மீதமுள்ள 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  நீதிமன்றக் காவல் முடிந்து  ஹரிஹரன்,  ஜூனைத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நால்வரும் இன்று மீண்டும்   ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 அப்போது வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி காந்தகுமார், 4 பேரையும்  வரும் 30 ஆம் தேதி வரை 15 நாட்கள்  நீட்டித்து மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது   இந்த வழக்கு தொடர்பாக  806  பக்க குற்றப்பத்திரிக்கையை  சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதேபோல்  ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட 4  சிறார்களுக்கும்  எதிராக 240 பக்க குற்றப்பத்திரிக்கை விருதுநகர் இளையோர் நீதிக்குழுமத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.