அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை பிடித்து விஜய் முதலிடம்..
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி விஜய் என்கிற இளைஞர் தற்போது முதலிடத்தில் இருந்து வருகிறார்.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 1,000 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து 16 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் 2வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் 13 காளைகளை அடக்கி மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி என்கிற இளைஞர் 3ம் இடத்தில் இருக்கிறார்.. இதற்கிடையே நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10வது சுற்று முடிவில் 58 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டு உரிமையாளர்கள் 23 பேர் மற்றும் பார்வையாளர்கள் 9 பேர் என 58 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.