×

‘சைவ உணவு மட்டும்தான்.. சிசிடிவி பொருத்த வேண்டும்’ - அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த புதிய நிபந்தனைகள்..

 


நெடுஞ்சாலையோர உணவகங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  நிறுத்தம் செய்ய புதிய  நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொலைதூர பயணங்களுக்காக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம்.  அவ்வாறு நரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு  உரிமம் வழங்கப்படும். அப்படி உரிமம் வழங்கப்படும் உணவங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, “உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  சைவ உணவுகள்  மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்றும், . கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும் என்றும், பயோ-கழிவறை இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தியிருக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ள தமிழக அரசு,  உணவுப் பொருட்களின்  விலை பட்டியல் பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என்றும்,  எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக விற்க கூடாது எனவும்  கூறியுள்ளது.

உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.  உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும் என்றும்,  பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.