×

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து - திருமாவளவன்

 

2024 ம் ஆண்டில், பா.ஜ.க. மீண்டும், ஆட்சிக்கு வரக் கூடாது எனவும், அவ்வாறு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவி பாசிச எதிர்ப்பு மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது: உலகம் முழுவதும் பாசிசம் என்று சொல்லுகிற, அந்த பொதுமொழி, இந்தியாவில், அது இந்துத்துவாவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா என்பது, இந்து மக்களின், ஒட்டுமொத்த இந்துக்களின் கோட்பாடு அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு. ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கம் அதன் குடும்பத்தைச் சார்ந்த, பிற இயக்கங்களான விஸ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி., பாரதிய மஸ்தூர் கிஸான், இப்படி பல அமைப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். 

பாஜக என்கிற அரசியல் கட்சியின், அணிகளாக இருக்கிற அனைத்தும், சங்பரிவார்கள்தான். அதனால்தான், மோடியும், அமித்ஷாவும் அந்த அமைப்புக்குள்ளே இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் சாதுரியமாக, இன்றைக்கு ஆட்சியையும் கைப்பற்றி விட்டார்கள். ஒருமுறைக்கு, இரண்டு முறை ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து விட்டார்கள். மூன்றாவது முறையும் அமர்ந்தால், என்ன ஆகும்? இந்த ஆபத்தை, நாம் உணர வேண்டும்.. 2024 ம் ஆண்டில், பா.ஜ.க. மீண்டும், ஆட்சிக்கு வரக் கூடாது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், என்ன நடக்கிறதோ, இல்லையோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, சிதைத்து, அரசியலமைப்பு சட்டத்தையே இல்லாமல் செய்துவிடுவார்கள். இவ்வாறு கூறினார்.