×

நவீன யுகத்தில் தீண்டாமை..  ஆரம்பத்திலேயே கிள்ளி எரிய வேண்டும் - டிடிவி தினகரன்..

 

மத நல்லிணக்கதை சீர்குலைக்கும் செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், நவீன யுகத்தில் தீண்டாமை என்பதை ஏற்க முடியாது என  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பணம் கொடுத்து திண்பண்டம் வாங்க வந்த  பட்டியலின மாணவர்களுக்கு , பெட்டிக்கடை உரிமையாலர் திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க கடைக்கு  வர வேண்டாம் என்றும்,  இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என்றும் அந்த கடை உரிமையாளர் அந்தச் சிறுவர்களிடம் கூறி அனுப்புகிறார்.   இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த தீண்டாமை அவலம் குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசி பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது. தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.