×

முடிவுக்கு வராத கொரோனா :  தமிழகத்தில் இன்று மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா..!!

 


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

 தமிழத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து சீரான  நிலையில் இருந்து வருகிறது.  கடந்த மார்ச் மாதத்திற்கு முந்தைய நிலையை ஒப்பிட்டு பார்க்கும்போது தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டு வர முடியவில்லை. இந்நிலையில்  தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது.  

அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 539 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்றைய பாதிப்பு 542 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 66 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 90 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 36 பேருக்கும், கோவையில் 68  பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்,  இன்று ஒரே நாளில் 628  பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 22 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில்  உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.  தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,034 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 5,407  பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.