×

பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பழங்குடியின பெண் விஷம் அருந்தி தற்கொலை!

 

செஞ்சி அருகே பாலியல் தொல்லை தாங்க முடியாமல்  பழங்குடியின விதவைப் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மாத்தூர்திருக்கை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சுரேஷ் (36) - தாட்சாயிணி(34).  தம்பதியினருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று  இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவர் சுரேஷ் கடந்த 28 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில் தனது 3 குழந்தைகளுடன் மாத்தூர் திருக்கை கிராமத்தில் 
தாட்சாயிணி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சார்ந்த சக்திவேல்(36) என்பவர் தன்னுடைய மாமனார் வீடான மாத்தூர் திருக்கை கிராமத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர், கணவன் இறந்த துக்கத்திலிருந்து மீளாத நிலையில் தனிமையில் இருந்த பழங்குடியின பெண்னை பாலியல் ரீதியாக நேரிலும் தொலைபேசியிலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாலியல் தொந்தரவு குறித்து தாட்சாயணி தன்னுடைய உடன் பிறந்த சகோதரி துர்காவிடம் கூறியுள்ளார். மேலும் தாட்சாயிணி சக்திவேல் தொலைபேசியில் பேசியதை ஆடியோ பதிவும் செய்து துர்காவிற்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில்  சக்திவேல் தொடர்ந்து தாட்சாயணிக்கு தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தாட்சாயணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தாட்சாயினி  சகோதரி துர்கா அனந்தபுரம் காவல் நிலையத்தில் சக்திவேல் மீது நடவடிக்கை கோரி   சக்திவேல் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் காவல்துறையில் சமர்ப்பித்தார். 


இதனையடுத்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி மற்றும் கஞ்சனூர் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சக்திவேலை கைது செய்தனர்.