×

அறிஞர் அண்ணா மாளிகை சமுதாய நலக்கூடம் - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..

 


 சென்னை மாநகராட்சியில் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடமான அறிஞர் அண்ணா மாளிகையை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78க்குட்பட்ட  சச்சிதானந்தம் தெருவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும்  எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். இரவிச்சந்திரனின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடமான அறிஞர் அண்ணா மாளிகை கட்டப்பட்டது.

இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து,  9 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.