ஐக்கிய அமீரக அதிபர் மறைவு - போர் நினைவுச் சின்னத்தில் அரை கம்பத்தில் கொடி!!
ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சையத் அல் நகியான் மறைவையொட்டி தமிழக அரசு துக்கம் அனுசரித்துள்ளது.
ஐக்கிய அமீரக அதிபராக இருந்தவர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74). 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக இருந்து வந்த இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரக அதிபர் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் போர் நினைவுச் சின்னத்தில் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சையத் அல் நகியான் மறைவையொட்டி அரை கம்பத்தில் கொடியை பறக்கவிட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மேன்மைதங்கிய ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். இன்றைக்கு உள்ள அமீரகத்தைக் கட்டியமைப்பதில் அவரது பெரும் பங்களிப்புகளும்; 2009 ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது துபாயை மீட்டெடுக்க அவர் செய்த முக்கியமான உதவியும் என்றென்றும் நினைவுகூரப்படும். மறைந்த தலைவருக்கு எனது அஞ்சலியையும் அவரது குடும்பத்தினர் மற்றும் அமீரக மக்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.