×

செம்பரப்பாக்கம் ஏரியில் மூழ்கி இருவர் பலி - செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

 

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம் பாரதியார் நகரை  சேர்ந்தவர் விக்னேஷ்.  20 வயதான இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். அதே  பகுதியை  சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  ரிச்சர்ட் மற்றும் விக்னேஷும் நண்பர்களாக உள்ள நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றுப்பாக்க சென்றுள்ளனர்.  சுற்றி பார்த்துவிட்டு ஏரிக்குள் இறங்கி அங்கிருந்த மதகில் நின்றபடி இருவரும் செல்பி எடுத்துள்ளனர்.

இதில் எதிர்பாராத விதமாக இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தவறி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்க அங்கிருந்த பொதுமக்கள் போராடினர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  ஆனால் அதற்குள் விக்னேஷ் மற்றும் ரிச்சர்ட் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து  தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டனர்.

இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் உயிரிழந்த இருவரின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பருடன் குளித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானது குறிப்பிடத்தக்கது.