×

தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தியதாக ஒரே நாளில் 821 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு

 

சென்னையில், தவறான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தியதாக ஒரே நாளில் 821 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருநகர காவல்துறை சென்னை மாநகரில் விபத்துக்களை குறைப்பதற்காகவும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான வாகனங்கள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாகவும் (Defective Number Plates), குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் இயக்கி விதி மீறல்களில் ஈடுபடும் போதும் விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்வது அதிகமாக காணப்படுகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. எனவே பிழையான பதிவெண் தகடு கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும். சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்தவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் நேற்று (01.05.2022) அன்று சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டு அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்தனர். இந்த சிறப்பு நடவடிக்கையில் குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை வாகனம் இயக்கியதாக 09 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  215 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.