×

 நகர்புற உள்ளாட்சி சாலைகளை மேம்படுத்த ரூ. 2,200 நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு..

 

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ வரும் 4 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கி, இதர திட்டநிதிகளை ஒருங்கிணைத்து,  மொத்தம் ரூ.9,588 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20,990 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.  

 

இதன், முதற்கட்டமாக வரும் 2023 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.5,140 கோடி மதிப்பீட்டில் 12,061  கிலோ மீட்டர்  நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.  பெருநகர சென்னை மாநகராட்சியில் 1,680 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,171 கோடி மதிப்பீட்டிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில்   7,116 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 2,535 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சிகளில் 3,265  கி.மீ.  நீளமுள்ள சாலைகள்  ரூ. 1,434 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.  மீதமுள்ள சாலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும்.

சாலைகள் அனைத்தும் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் சாலைகளின் மேற்தளத்தினை முறையாக வெட்டி எடுத்து (milling) புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்கள். சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக (Nodal Agency) தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) நியமிக்கப்பட்டுள்ளது. தரமான சாலைகள் அமைக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்நிறுவனத்தால் இறுதி செய்யப்படும்.” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.