இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணித்த கொடி காத்த திருப்பூர் குமரன் - ஓபிஎஸ், தினகரன் ட்வீட்!!
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்தநாள் இன்று. இவர் இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். 1904 ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. அன்றைய காலகட்டத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றார். அப்போது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11இல் உயிரிழந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் திருப்பூர் குமரனின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவுகூறும் வகையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் , இந்திய நாட்டின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, தன் இறுதி மூச்சு வரை வந்தே மாதரம் என முழக்கமிட்டு தேசியக் கொடியினை பிடித்தவாறே தனது இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணித்த கொடி காத்த திருப்பூர் குமரின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தினை செலுத்துகிறேன்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.