×

சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகம் விளக்கம்

 

திருநள்ளாறு கோவில் சனிப்பெயர்ச்சியில் பத்தர்களின் குழப்பத்திற்கு கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரணேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள்  சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சனிப்பெயர்ச்சியின் போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்து நலங்குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை எள்தீபம் ஏற்றி வணங்கி செல்வார்கள். மேலும் சனி பெயர்ச்சிக்கு முன்னதாக 48 நாட்களும் சனிப்பெயர்ச்சி முடிந்து 48 நாட்களும் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். 

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டிற்கான சனி பெயர்ச்சியானது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். எனவும்  2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார் எனவும் இரு விதமான தேதிகளில் சனி பெயர்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தக் குழப்பத்தை போக்கும் வகையில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோயில் கட்டளை தம்பிராயன் சுவாமிகள், மற்றும் சிவாச்சாரியார்கள் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பேசியுள்ள திருநள்ளாறு கோயில் சிவாச்சாரியார் ராஜா சாமிநாதன், "திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியானது சோபகிருது வருடம் மார்கழி மாதம் அதாவது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அப்போது சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். திருநள்ளாறு ஆலயத்தில் சனி பெயர்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை சோபகிருது வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கம் தைபூச நாளில் வெளிவர உள்ளது. வெளி வந்தவுடன் துல்லியமாக தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.