×

'4 மகன்கள், ஒரு மகள், பேரப்பிள்ளைகள்' - கவனிக்க ஆளில்லை ; விஷம் குடித்த 3 முதியவர்கள்!!

 

மூன்று முதியவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.  இவருக்கு சின்ன பாப்பா என்ற மனைவி உள்ளார்.  விவசாயியான ராமசாமி - சின்ன பாப்பா தம்பதிக்கு 4 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் . குடும்பத்துடன் விவசாயம் பார்த்து வந்த இவர் விவசாயம் செய்ய முடியாமல் போனதால்,  தாய் தந்தையரை வீட்டில் விட்டுவிட்டு பிள்ளைகள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். 


ராமசாமி அவரது மனைவி சின்னப்பாப்பா இவர்களுடன் அண்ணி ஜக்கம்மா ஆகியோர் தனியாக வசித்து வந்துள்ளனர்.  இந்த சூழலில் வயதாவதால் தங்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய ஆள் இல்லாமல் முதியவர்கள் மூவரும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர்.  நான்கு மகன், மகள் , பேரக்குழந்தைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாமல் மனவேதனையில் இருந்து இவர்கள் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர்  மூவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  தற்போது இவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.