×

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உலகளாவிய சுகாதார அவசர நிலை அறிவித்தது WHO..

 

குரங்கு அம்மை நோய் பரவல்  அதிகரித்து வருவதால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை  உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.  

முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குரங்கு அம்மை நோய் பின்னாளில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் மனிதர்களுக்கு குரங்கமை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.  வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய இந்த நோய் பின்னர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது. இது வேகமாக பரவும் நோயல்ல என்றாலும்,  சமூகப் பரவலாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு  அறிவுறுத்தியிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம்  முதல் மீண்டும் குரங்கு அம்மை பரவத் தொடங்கியது.

கடந்த ஜூன் மாதம் கூட குரங்கு அம்மை பாதிப்பு, உலக சுகாதார அவசர நிலையை அடையவில்லை என்று டபிள்யூ எச் ஓ தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது  உலகம் முழுவதுமாக பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக  பரவி வருகிறது.   கடந்த சில வாரங்களில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இந்தியாவில் இந்த வைரஸ் தற்போது கால்பதித்துவிட்டது.   இந்த நிலையில் நேற்று  குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருவதால்,   உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.  

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. தனைத்தொடந்து செய்தியாளார்களைச் சந்தித்த  WHO தலைவர் டெட்ரோஸ், குரங்கு அம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாகவும்,  சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் எனவும் அறிவித்துள்ளார்.  கடந்த 2 வருடங்களில் கொரோனாவுக்கு அடுத்தப்படியாக குரங்கு அம்மை நோயை சுகாதார நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளது.