×

பாஜக அரசு எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்திவருகிறது- திருமாவளவன்

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பாராளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்காக  24 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக நாலு பேர் கூட்டுத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் பாசிச அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு.

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பாஜக அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜக அல்லாத மாநிலங்களை ஆட்சி புரியும் தலைவர்கள் போன்றவர்களை மத்திய அரசின் புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் அச்சுறுத்தி வருகிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக கனியாமூர் சம்பவத்தில் மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பிணக்கூறு ஆய்வுகள் தெரிவிக்கும் வகையில் உள்ளது. ஆனால் அந்தச் சம்பவங்கள் மறைக்கப்பட்டு மடைமாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கூடத்தை தாக்கியவர்கள் கலவரத்தை உண்டாக்கியவர்கள் என திசை திருப்பும் செயல் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உளவுத்துறை தலித் இளைஞர்களால் வன்முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறியிருப்பது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஸ்ரீமதி சாவுக்கு நீதி வேண்டும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமரை அமர வைத்து தமிழர்களின் பாரம்பரியம்  குறித்து தமிழக முதல்வர் பாடம் எடுத்திருக்கிறார். என்எல்சி நிர்வாகத்தில் பொறியாளர் தேர்வில் தமிழர் ஒருவர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உளவுத்துறை மற்றும் காவல் துறை விழிப்பாக செயல்பட்டிருந்தால் கலவர சம்பங்கள் நடந்திருக்காது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. மேலும் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து தனி கண்காணிப்பு கொண்டு வர வேண்டும் அதற்கு தமிழக அரசும் முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் கருத்து சொல்லி இருக்கிறார். அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது சாதாரண ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும் மின்கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்” எனக் கூறினார்.