×

துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக பொதுமக்களை மிரட்டிய இளைஞர்கள்! கொடைக்கானலில் பரபரப்பு

 

கொடைக்கானலில் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவதாக பொதுமக்களை மிரட்டிய கேரளா இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளாவில் இருந்து இளைஞர்கள் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது கேரளா பதிவில் கொண்ட கார் ஒன்று அதிவேகத்துடன், பலத்த சத்தத்துடன் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனை கண்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் வாகனத்தின் சத்தத்தை குறைக்க வேகத்தை குறைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

காரில் இருந்து இறங்கிய இரண்டு வாலிபர்கள் தங்களது காரை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று அந்த காரில் இருந்தவர்கள் கூறி இருந்தனர்.பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் வந்த பிறகு காரில் வந்த வாலிபர்களை பிடித்து சென்றனர். அப்போது காரில் இருந்து பொம்மை துப்பாக்கி கைப்பற்றப்பட்டு இருக்கிறது இந்த பொம்மை துப்பாக்கியை வைத்து தான் பொதுமக்களை மிரட்டி இருக்கிறார்கள். பொம்மை துப்பாக்கியை வைத்து பொதுமக்களை மிரட்டிய போது கைகலப்பும் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர் அப்போது கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த விஷ்ணு, பகத் என்ற இளைஞர்கள் மது போதையில் வாகனத்தை இயக்கி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்த பொம்மையை துப்பாக்கியையும் கொடைக்கானல் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.