×

காதலிக்கு கர்ப்ப பரிசோதனை செய்யக்கோரி தகராறு செய்த இளைஞர்

 

திருவள்ளூர் அருகே காதலிக்கு கர்ப்ப பரிசோதனை செய்யக்கோரி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்த  காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் தனது 16 வயது காதலியை கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த செவிலியரிடம், காதலிக்கு கர்ப்ப பரிசோதனை செய்யக் கோரி  கேட்டுள்ளார்.

செவிலியாரோ மருத்துவர் இல்லாமல் கர்ப்ப பரிசோதனை செய்ய முடியாது என கூறி உள்ளார். காதலிக்கு வயிற்றுவலி இருப்பதாகவும் அதனால் மாத்திரை தரக்கோரி கேட்டுள்ளார். மாத்திரைகள் கொடுத்த செவிலியர் முகத்தில் மாத்திரைகளை தூக்கி எறிந்து
மருத்துவமனை எதற்கு வைத்துள்ளீர்கள்? எனக் கூறி செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல் மருத்துவமனை ஜன்னல் கதவுகளை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்து காதலியுடன் தப்பிச் சென்றுள்ளார். அவர் மீது ஆரம்ப சுகாதார செவிலியர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை கடம்பத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.