×

மோட்டார் சைக்கிள் எரிந்து அதில் சென்றுகொண்டிருந்த முதியவர் தீயில் கருகி பலி

 

புதுச்சேரி அருகே மொபட் எரிந்து விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற முதியவர் தீப்பிடித்து எரிந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் பகுதியில் இருந்து அபிஷேகபாக்கம் போகும் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர், தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். திடீரென்று மொபட் தீப்பிடித்து எரிந்தது. அதன் அருகில் கீழே விழுந்த நிலையில் அந்த முதியவர் எரிந்து கொண்டு  இருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் தவளக்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியில் முதியவர் இறந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. மொபட் தீ பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டதா?  அல்லது வேறு ஏதேனும் காரணமான என்பது குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.