தன்பாலின உறவில் இருந்த பெண்ணை கடத்திய குடும்பத்தினர்! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
தன் பாலின உறவிலிருந்த பெண்ணை குடும்பத்தினர் திடீரென்று வந்து கடத்திச் சென்று விட்டதால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இன்னொரு பெண் நீதிமன்றம் செல்ல, இளம்பெண் விருப்பம் போல் வாழ நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விருதுநகரை சேர்ந்த அந்தப் பெண் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த இன்னொரு பெண்ணுக்கும் காதல் வந்தது. கடந்த ஒரு வருடமாக இரண்டு பேரும் காதலித்து வந்தோம் . கடந்த ஏழாம் தேதி திருமணம் செய்து கொண்டோம்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் வந்தார்கள் . திடீரென்று வந்து அந்த பெண்ணை கடத்தியும் சென்று விட்டார்கள். என் தோழியை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன். அதில் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அந்தப் பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டு விடுமாறு வலியுறுத்தி என் தோழியை கடுமையாக தாக்கியிருக்கிறார். என்னையும் அவர் மிரட்டினார். இது குறித்து வத்தலகுண்டு துணை காவலர் கண்காணிப்பாளரிடம் முறையிட்டேன். ஆனால் தற்போது வரைக்கும் வத்தலகுண்டு காவல் துறையினர் புகாரின் பேரில் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை .
என் தோழிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. அந்த பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் தோழி 21 வயது ஆகியவர். அதனால் அவரது விருப்பப்படி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.